ஒரு அழகான கதை!

ஒரு அழகான கதை!

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக்  கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படிக் கேட்டார்.
அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, "ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே" என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.
இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.

சுமார் 10 தினங்கள் கழித்து மீண்டும் அந்த வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக்கல்லை கொடுத்து, "இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள்" என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி, பிள்ளைகளிடம்கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது வீட்டில் யாருமில்லா சமயம்மட்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.
இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.
அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம், அதைக் கவனித்த வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, "எங்கே அதிலிருந்த கல்?" என்று மனைவியை கேட்டான்.
ஏதுமறியாத மனைவி நடந்ததைக்கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.

சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்ச்சுனன் கண்ணனிடம்,"இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன்" என்று கூறினார்.
அதை ஆமோதித்த கண்ணனும்,"இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு" என்றார்.
ஆச்சர்யப்பட்டான் அர்சுனன். ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, "இதென்ன விந்தை….! வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?"

"எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம்" எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.

அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் "உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா?" எனக் கேட்டான்.
உடனே தனக்குள் யோசித்த இவன் "இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது" என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்பவிட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை
விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலைவிட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.
ஆம், அவன் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கல்தான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால் 'என்னிடமே சிக்கி விட்டது' என்று கூச்சலிட்டான்.
அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.
அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மட்டுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டான்.
அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப்பட்ட அர்சுணன் கண்ணனிடம், "இது எப்படி சாத்தியம்?" எனக் கேட்க கண்ணனும் சிரித்துக்கொண்டே…
"இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.
ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.
ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….
அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை" எனக் கூறினார்.

இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்..!

No comments:

Post a Comment